Take a fresh look at your lifestyle.

விபத்து வழக்குகளில் லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் டிஸ்மிஸ்: கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு

57

விபத்து வழக்குகளில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கிய பெண் போக்குவரத்து ஆய்வாளரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராணி. இவர் தனக்கு காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட போலீஸ் ஜீப்பை ஓட்டுவதற்கு, தனியாக தனது சொந்த செலவில் ஓட்டுநர் ஒருவரை நியமித்ததுடன் இவரது சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த செல்லும் போது அந்த தனியார் ஓட்டுநரை அழைத்துக்கொண்டு, அலுவலக ஜீப்பில் செல்வதாக குற்றசாட்டுக்கள் எழுந்தன.

மேலும் விபத்து நடந்த இடத்திற்கு, அவருக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் சிலரை வரவழைத்து பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விட்டு, அவருக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு, பாதிக்கப்பட்ட பொதுமக்களை வற்புறுத்தி வந்துள்ளார். அதனை ஏற்க மறுக்கும் பொதுமக்களை, ஆய்வாளர் என்ற முறையில், மிரட்டி வந்துள்ளார். அதன் பின்னர் இழப்பீடாக கிடைக்கும் பணத்தில், ஒரு பகுதியை அவர் எடுத்துக் கொள்வதாக பொதுமக்கள் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தனர். அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அமல்ராஜ் பள்ளிக்கரணை துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையாவுக்கு உத்தரவிட்டார். ஜோஸ் தங்கையா நடத்திய விசாரணையில் ஆய்வாளர் ராணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிவந்ததை அடுத்து அதனை அறிக்கையாக காவல் ஆணையரிடம் தாக்கல் செய்தார்.

அதனையடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ராணியை தற்காலிக பணி நீக்கம் செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் காமினி தலைமையில் கடந்த 7 மாதமாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அதிலும் பல்வேறு முறைகேடுகளில் ராணி ஈடுபட்டது உறுதியானது. அதனையடுத்து ராணியை நிரந்தரப் பணி நீக்கம் அதாவது காவல்துறையில் இருந்து டிஸ்மிஸ் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இது காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.