Take a fresh look at your lifestyle.

‘வைக்கம்’ போராட்ட நூற்றாண்டு விழா: ஓராண்டு அரசு சார்பில் கொண்டாட்டம் சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு

45

‘வைக்கம்’ போராட்ட நூற்றாண்டு விழா அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டசபையில், இன்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் குறித்து, விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை படித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று வரலாற்றிலே ஒரு முக்கியமான நாள். 1924 ம் ஆண்டு, மார்ச் 30 அன்று, மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று. அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற காரணமாக இருந்த தந்தை பெரியாரைப் போற்றும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி 110-ன்கீழ் இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறேன். எளிய மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி, வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியாரின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தவும், “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா” நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.

வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30 ம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ம் ஆண்டு, மார்ச் 30 ஆம் நாள் தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்தப்படும். போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, பின்வரும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

1. வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” நிகழ்ச்சியில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனோடு நானும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறேன். வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

2. தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

3. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகியவற்றின் கூட்டு வெளியிடாக இது வெளியிடப்படவுள்ளது. இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

4. இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும்.

5. எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

6. கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

7. தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த ‘அருவிக்குட்டி’ கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

8. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

9. தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

10. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும். இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும்.

11. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ பத்திரிகை மூலம் கொண்டு வரப்படும்.

இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.