Take a fresh look at your lifestyle.

சென்னை கீழ்க்கட்டளை, ரெட்டேரியில் 19 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

36

கீழ்கட்டளை மற்றும் ரெட்டேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 19.1 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/St.Thomas Mount) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (03.04.2023) காலை மேடவாக்கம் மெயின் ரோடு, கீழ்கட்டளை பேருந்து நிறுத்தம் சந்திப்பு அருகே கண்காணித்தபோது, அங்கு நின்றிருந்த ஒரு நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்து விற்பனை செய்த ஒடிசாவைச் சேர்ந்த புதிபாமன் நாயக் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 13 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு புதிபாமன் நாயக் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

இதே போல, அண்ணாநகர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Anna nagar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று (03.04.2023) ரெட்டேரி சந்திப்பில் கண்காணித்து அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.