சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண், கார் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரம் பறிமுதல் செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை, போயஸ் கார்டன், ராகவீர அவென்யூவில் தனது தந்தை ரஜினியுடன் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி- மாதம் வீட்டிலுள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகளை சரி பார்த்தபோது, தங்க மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படையினர் ரஜினி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி (வயது 46) என்பவர் மீது சந்தேகம் இருப்பது தெரியவந்தது. மந்தவெளி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரியை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அவரது வங்கி விவரங்கள் வைத்து ஆய்வு மேற்கொண்டதில் ஈஸ்வரி ரஜினி வீட்டில் தங்க, வைர நகைகள் திருடியது உறுதியானது.
அதனையடுத்து போலீசார் ஈஸ்வரியைப் பிடித்து கிடுக்குப்பிடி விசாரணையில் பரபரப்பு தகவல்களை அவர் வெளியிட்டார். சுமார் 18 ஆண்டுகளாக ரஜினி வீட்டில் ஈஸ்வரி வேலை செய்து வந்துள்ளார். ஐஸ்வர்யா தங்க, வைர நகைகள் அடங்கிய லாக்கரின் சாவியை வைத்து செல்லும் இடத்தை ஈஸ்வரி தெரிந்து கொண்டுள்ளார். வீட்டின் கார் டிரைவர் திருவேற்காட்டைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 46) உதவியுடன் லாக்கரில் இருந்து சிறிது சிறிதாக தங்க, வைர நகைகள் திருடி வந்துள்ளார். மேலும் திருடிய நகைகளை விற்று சென்னை ஓஎம்ஆர் சாலையில் வீடு மற்றும் நகைகளை வாங்கி குவித்துள்ளார் போன்ற விவரங்கள் தெரியவந்தன.
அதனையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஈஸ்வரியிடம் இருந்து 100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.