Take a fresh look at your lifestyle.

மகளிர் காவலர்களின் பொன் விழா ஆண்டு: அவள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

40

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ‘தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழா ஆண்டு‘ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, ‘‘அவள்‘‘ புதிய திட்டம் மற்றும் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்து, சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் 1973-ஆம் ஆண்டு முதல் பணியாற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று (17.3.2023) சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் ‘‘மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு‘‘ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு நடத்தப்பட்ட கவாத்து, திறன் பயிற்சி, சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். ‘மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு‘ நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவலில் பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக ‘அவள்’ (AVAL – Avoid Violence through Awareness and Learning) என்ற திட்டத்தை துவக்கி வைத்து அதற்கான இலச்சினை அறிமுகப்படுத்தி, அத்திட்டத்திற்கான காணொளி காட்சி மற்றும் விழிப்புணர்வு காட்சியையும் வெளியிட்டார்.

மேலும், தற்காப்பு கலை வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட 400 கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்பு தற்காப்பு கலை பயிற்சியை செய்து காட்டி திறமையினை வெளிப்டுத்தினர். மேலும், மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார்.
“அவள்” திட்டத்தின் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தற்காப்பு பயிற்சிகள் அளிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் அணுகுமுறை மற்றும் திறனை மேம்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு அம்ச பயிற்சி மற்றும் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தி, “அவள்” திட்டம் செயல்பட உள்ளது.

I. சென்னை பெருநகரில் உள்ள காவல் சிறார் மன்றங்களை மேம்படுத்துதல்

சென்னை பெருநகரத்தில் தற்போது 112 பெண்கள் & ஆண்கள் சிறார் மன்றங்கள் பல்வேறு காவல் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சிறார் மன்றத்திற்கும் இணையதள வசதியுடன் கூடிய LED ஸ்மார்ட் டிவி வழங்கப்படும். இந்நன்முயற்சியானது பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தி, அவர்களது திறமையை வெளிக்கொணரரவும் தற்போது அமலில் உள்ள சட்ட நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் வசதிகளையும் பெற்றிட வழிவகை செய்யப்படுகிறது. இதன் மூலம் 5,452 சிறுமியர் மற்றும் சிறுவர்கள் பயனடைவார்கள்.

2. காவல்துறையினருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்புடைய பிரச்சனைகளில் புலன் விசாரணை திறனை மேம்படுத்திட ஆண்/ பெண் காவல் ஆளினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. காவல் அலுவலர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பலதரப்பட்ட சட்ட நுணுக்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களை கையாளுதல், மிகவும் நுட்பமான வழக்குகளில் புலன் விசாரணையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கும் வழிமுறைகள் மற்றும் அனைத்து நுட்பமான வழக்குகளிலும் தடயங்கள் மற்றும் சாட்சிகளை பகுப்பாய்வு செய்தல் குறித்து சிறப்பு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். இதன் மூலம் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 23,791 காவல் அலுவலர்கள் பயனடைவர்.

3. சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் தொடர்பு
பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இத்திட்டம் மூலம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமை, பாதுகாப்பு மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான தகவல்கள் ஒளிபரப்பப்படும். இத்தகவல்கள் பொதுமக்களைச் சென்றடைவதற்காகப் ஊடகங்கள், ரேடியோ பண்பலைவரிசைகள், சமூக வலைதளங்கள், யூடியூப், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் வாசகங்கள் ஒளிபரப்பப்படும். இதற்கான எலக்டிரானிக் மற்றும் இணையதள உபகரணங்கள் பெறப்பட்டு, பாதுகாப்பு விழிப்புணர்வுகள் மற்றும் அறிவுரைகள் உடனுக்குடன் ஒளிபரப்பச் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயனடைவர்.

4. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தற்காப்புப் பயிற்சிகள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபத்து நேரங்களில் எதிரிகளிடமிருந்து தம்மை தற்காத்து கொள்ளவும், தம்மை சுற்றியுள்ள நபர்களுக்கு ஆபத்து நேரிடும்போது அவர்களை பாதுகாக்கவும், தற்காப்பு பயிற்சிகள் தற்காப்பு கலை வல்லுநுர்கள் கொண்டு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். அதன்படி பெண்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள் என மொத்தம் 50,000 பெண்களுக்கு சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவள் திட்டத்தின் மூலம் காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களுக்கு உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் விதமாக இணையதள வசதி அளிக்கக்கூடிய வகையிலான தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கும் நிகழ்ச்சியின் அடையாளமாக 2 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களுக்கு ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கினார்.

பின்னர், “தமிழக காவல் துறையில் பெண்கள்” என்ற தலைப்பில் குறும்படம் ஒளிப்பரப்பட்டது. தொடர்ந்து, பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சாகச மற்றும் கலை நிகழ்ச்சிகள், அதிரடிப்படை பெண் காவலர்களின் பயிற்சி திறன், ஆயுதங்களை கையாளும் விதம், தற்காப்புக்கலை மற்றும் ஆயுதப்படை பெண் காவலர்கள் சிலம்பம் சுற்றுதல், நீள கர்ணமடித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்..

தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டையொட்டி சுமார் 100 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான மிதிவண்டி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், காவல்துறை இயக்குநர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள், பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
*****