Take a fresh look at your lifestyle.

குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்களை சூட்டுங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

43

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13 ந் தேதி) சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர் சி. மணிவண்ணனின் மகள் லக்ஷயா கௌதம் ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து பேசியதாவது: இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967 -க்கு முன்பு நடைபெறுமென்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறாத சூழ்நிலையில்தான் நடைபெற்றிருக்கிறது. ஆனால் 1967 ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்தது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா, முதன்முதலாக முதலமைச்சராக சட்டமன்றத்திற்குள் நுழைந்து, சட்டமன்றத்தில் மூன்று தீர்மானங்களைக் கொண்டுவந்து உடனடியாக நிறைவேற்றித் தந்தார். அந்த மூன்றில் ஒன்றுதான் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் ஏற்கனவே நடந்திருந்தாலும் இனி நடக்கவிருக்கக்கூடிய திருமணங்களாக இருந்தாலும், அந்த சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தார். அடுத்த தீர்மானமாக இருமொழிக் கொள்கையை சட்டமாக்கித் தந்தார். அதற்கடுத்து இன்றைக்கு தமிழ்நாடு, தமிழ்நாடு என்று நாம் கம்பீரமாக சொல்லிக் கொண்டிருக்கிறோமே இந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். அதையும் நிறைவேற்றித் தந்தார். எதற்காக இதையெல்லாம் சொல்லுகிறேன் என்று சொன்னால், இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்தத் திருமணம் என்பது வெறும் சீர்திருத்தத் திருமணமாக மட்டும் நீங்கள் கருதக்கூடாது, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணமாகவும் நடந்திருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், இது ஒரு தமிழ்த் திருமணம். இந்த தமிழைத்தான் கலைஞர், தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தார்.

இப்போதெல்லாம் சீர்திருத்தத் திருமணம் நடக்கிறது என்றால், யாரும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை, முன்பெல்லாம் நடக்கிறபோது ஆச்சரியப்பட்டோம். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் இந்தத் திருமணங்கள் நடக்கத் தொடங்கி இருக்கிறது. இது தமிழ் திருமணமாக நடக்கிற காரணத்தால் நம்முடைய மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று என்னுடைய அன்பான வேண்டுகோளை மாத்திரம் சொல்லி, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் இருந்து வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.