சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் நேரடியாக பேசும் வசதியை சென்னை புழல் சிறையில் சிறைத்துறை இயக்குநர் டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி சட்டப்பேரவையில் கடந்த 10ம் தேதியன்று அறிவித்தார். அதன்படி நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புழல் பெண்கள் தனிச்சிறையில் சிறை வாசிகளுக்கான வீடியோ அழைப்பு சோதனையை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார்.
கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்த வீடியோ அழைப்பு வசதி மூலம் ஒரு மாதத்தில் 10 முறை தொடர்பு கொள்ளலாம். அவர்கள் ஒவ்வொரு அழைப்பிலும் 12 நிமிடங்கள் வரை பேச முடியும். ஒரு சிறைவாசிக்கு மாதத்திற்கு மொத்தம் 120 நிமிடங்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை புழல் சிறையில் 1 மாதம் சோதனை நடத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த வசதி
தொடங்கப்படவுள்ளது.நீண்ட தூரத்தில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் அவர்களை நேரடியாக சிறைக்கு வந்து சந்திக்க முடியாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதிகள் சிறைவாசிகளுக்கு சிறந்த குடும்ப இணைப்பை வழங்குவதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கும், மேலும் சிறைவாசிகளின் மனதில்
இத்திட்டம் சீர்திருத்தத்தைக் கொண்டுவர உதவும் என சிறைத்துறை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஐஜிக்கள் கனகராஜ், முருகேசன் மற்றும் சிறை கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், ஆர்.கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.