Take a fresh look at your lifestyle.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

64

திட்டங்களை விரைந்து துவக்கி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட கலெக்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இன்று (27 ந் தேதி) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது: இதுவரை வேலூர், சேலம், மதுரை ஆகிய மூன்று இடங்களில் 14 மாவட்ட அதிகாரிகளுடன் நேரடி ஆலோசனைகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம். அந்த வரிசையில் இன்று விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளாகிய உங்களைச் சந்திக்கிறோம். பொதுவாக, துறையின் செயலாளர்களோடு மட்டும் முதலமைச்சர் தொடர்பு கொள்ள முடியும், ஆலோசனைகள் செய்ய முடியும், கருத்துகளையும் பரிமாற்றிக்கொள்ள செய்ய முடியும். அதுபோதும் என்ற சூழல் தான் இதுவரை இருந்தது. ஆனால் அதுபோதாது என்று நான் நினைத்து தொடங்கிய திட்டம் தான் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டம்.

முதன்முதலாக வேலூருக்குச் சென்ற போது நடத்திய ஆய்வுக்கும் – அடுத்தடுத்த மாவட்டங்களில் நடத்துகிற ஆய்வுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். வேலூரில் நானோ, அமைச்சர்களோ, துறை செயலாளர்களோ என்ன மாதிரியான கேள்விகளை முன்வைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு மற்ற மாவட்டத்து அதிகாரிகள் அதனைத் தங்கள் மாவட்டத்தில் முடித்து வைத்திருக்கிறார்கள். நம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வந்தால் இதையெல்லாம் கேட்பார் என்று நினைத்து செயல்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனை நான் குறையாகச் சொல்லவில்லை. துரிதமான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். அடுத்து, நம் மாவட்டத்துக்கு முதலமைச்சர் எப்போது வருவாரோ என்ற எண்ணத்தோடு பல மாவட்டங்களில் பணிகள் எல்லாம் முடுக்கி விடப்படுவதாகவும் அறிகிறேன். எதுவாக இருந்தாலும் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறுகிறது, மக்கள் பயன்பெறுகிறார்கள் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

காலக்கெடு உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது என்பது, * அறிவிக்கப்பட்ட திட்டம் விரைந்து துவக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். * எல்லாப்பணிகளும் தரமானதாக, முழுமையானதாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதனைத்தான் மாவட்ட கலெக்டரிடமும்; மாவட்ட நிலை அலுவலர்களிடமும் எதிர்பார்க்கின்றோம். அதற்குத் தேவை தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகும்.
இந்த மூன்று மாவட்டங்களைப் பொறுத்தவரை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளை வேகப்படுத்துங்கள். வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணிகளை கவனமாக தேர்ந்தெடுத்து பணிக்கு வருபவர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்குங்கள். 15-வது நிதிக்குழு மானியப் பணிகளை விரைவாக முடித்திடவும் அறிவுறுத்த விரும்புகிறேன்.

என்னுடைய காலத்தில் இந்த மாவட்டத்தில் இந்த திட்டத்தை முடித்துக் காட்டினேன்- என்று உங்களுக்கு பெயர் வாங்கித்தரும் அளவுக்கு முடித்துக் காட்டுங்கள். ஒரு மனிதனின் மனதிருப்திக்கு இணையான மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. அத்தகைய மனநிறைவைப் பெறும் அளவுக்கு ஒவ்வொரு திட்டத்தையும் நீங்கள் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய திட்டங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, குடிநீர்; மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த்துறை வழங்க வேண்டிய பட்டா உள்ளிட்ட சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சாலை மேம்பாடு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், அதற்கான திட்டங்களை 100 சதவிகிதம் நிறைவேற்றுதல், இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் கல்வி, அரசு மருத்துவமனையில் தரமான மருத்துவ சிகிச்சை ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவது மக்களுக்கு நல்ல பயனை தரும்.

வேளாண்மைத்துறையை பொறுத்தவரை, இந்த அரசு அறிவித்த முக்கியமான திட்டம், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அதன் செயலாக்கத்தில் பலதுறைகளின் பங்களிப்பு தேவைப்படுகின்றது. இத்திட்டத்தில் பணி திருப்திகரமாக இருக்கும் வகையில் இனி செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இனி, இன்று ஆய்வு செய்யப்பட்ட மூன்று மாவட்டங்களும் விவசாயம் சார்ந்த மாவட்டங்கள் என்பதால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்குதல் ஆகியவற்றில் துறை செயலர், மாவட்ட கலெக்டர்கள் என அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன். விவசாயிகள் வாழ்வு மேம்பட இவை மிகவும் முக்கியமானதாகும்.

மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது ஓரு பக்கம் இருந்தால், இன்னொரு பக்கத்தில் பல்லாயிரம் கோடிகள் பணம் ஒவ்வொரு திட்டத்திற்கும் செலவு செய்யப்படுகிறது. எனவே, இரண்டு வகையிலும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் செயல்பட்டாக வேண்டும். இதுபோன்ற கூட்டுக் கூட்டங்களின் மிக முக்கியமான பயன் ஒருங்கிணைப்பு ஆகும். அலுவலர்கள் அனைவரையும் ஒரு சேர சந்திப்பது என்பது மிகமிக முக்கியமானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை கவனித்து வந்தாலும், யாரும் தனியாகச் செயல்பட இயலாது. ஒன்றோடு ஒன்று இணைந்தவைதான் அரசுத் துறைகள்.

இன்றைய ஆய்வுக் கூட்டத்தின் போது சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் காணப்பட்டது. நான் எந்தத் துறையையும் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. மாவட்ட கலெக்டர்களும், துறைத் தலைவர்களும் அறிவீர்கள். அளிக்கப்பட்ட நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்காக, திட்டத்திற்காக செலவிடுவது தான் திறன்மிகு நிருவாகம் ஆகும். அதைத்தான் நான் உங்களிடம் எதிர்ப்பார்கிறேன். மாவட்ட நிருவாகம் என்பது மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள அமைப்பாகும். எல்லாத் திட்டங்களும் மாவட்ட அதிகாரிகளாகிய உங்கள் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை எந்தளவுக்கு விரைவாக சென்றடைகிறது என்பது உங்கள் திறமையை பொறுத்தது. நீங்கள் நல்ல திறமைமிக்க அலுவலர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் நற்பயன் பெற வேண்டும். அதற்காகத் தான் அனைத்துமே.

மக்களோடு பழகி அவர்களின் தேவை அறிந்து செயலாற்றுங்கள். அவர்களின் பாராட்டினை பெறும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். அரசின் ஆணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல் நீங்கள் செயல்படுத்த விரும்பும் புதிய திட்டங்களை அரசிற்குச் சொல்லி முன்மொழிவுகள் அனுப்புங்கள். அரசு உங்கள் நல்ல பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.