Take a fresh look at your lifestyle.

சென்னை பொருட்காட்சி நிறைவு: 8.30 லட்சம் பேர் கண்டுகளிப்பு

54

பொருட்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர்கள் ராமச்சந்திரனிடமிருந்து சிறந்த சேவைப்பிரிவில் தேர்வு பெற்ற வருவாய்த் துறை அரங்கிற்கான நினைவு பரிசை சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி பெற்று கொண்டார்.

சென்னை தீவுத்திடலில் நடந்து வந்த பொருட்காட்சி நிறைவு பெற்றது. பொருட்காட்சியை 8 லட்சத்து 30 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி 4-ந்தேதி தொடங்கிய 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நேற்று நிறைவு பெற்றது. இதன் நிறைவு விழாவில் சிறந்த அரங்கம் அமைத்த அரசு துறையினருக்கு அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

அந்தவகையில் அரங்கம் அமைப்பில் ஓட்டு மொத்தமாக சிறந்து விளங்கியதற்காக காவல்துறைக்கும், தமிழ்நாடு அரசுத்துறைகளில் சிறப்பான அரங்கம் அமைப்பிற்கு முதல் பரிசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறைக்கும், 2-ம் பரிசு உயர்கல்வித்துறைக்கும், 3-ம் பரிசு சிறைத்துறைக்கும் வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியம், தெற்கு ரெயில்வே, மெட்ரோ ரெயில் நிறுவனம் உள்ளிட்ட சிறப்பாக அரங்கம் அமைத்த மத்திய அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் மாநில அரசுத் துறைகளின் 27 அரங்கங்களும், 21 பொதுத்துறை நிறுவன அரங்கங்களும், மத்திய அரசின் 2 துறைகளின் அரங்கங்களும் பிற மாநில அரசின் ஒரு அரங்கமும் பங்கேற்றன. பொருட்காட்சியில் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், 30 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இப்பொருட்காட்சியில் 110 சிறிய கடைகளும், 30 பெரிய அரங்கங்களும் 15-க்கும் மேற்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் காணக் கிடைத்தன. பனிக்கட்டி உலகம், மீன் காட்சியகம், பேய் வீடு 3 டி தியேட்டர் போன்ற காட்சிகள் கண்காட்சியில் களை கட்டின.டெல்லி அப்பளம் உள்ளிட்ட உணவு வகைகளும் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இதுவரை பார்த்திராத விளையாடி மகிழ்ந்திட 32-க்கும் மேற்பட்ட விளையாட்டுச் சாதனங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு வளாகமும் இங்கே இடம்பெற்று இருந்தது. சிறுவர் ரெயில், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள் இளையோரைச் சுண்டி இழுக்கும் வண்ணம் அமைக்கப்பட்டு ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன.8 லட்சத்து 30 ஆயிரம் பார்வை யாளர்கள் கண்டுகளித்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளும் பார்த்து சென்றுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு வருகையை ஒப்பிட்ட போது, ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பார்வையிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.