சென்னை, ஆர்.கே நகர் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். 317 கிராம் மெத்தம்பெட்டமைன், 5 செல்போன்கள், ரொக்கம் ரூ. 12 ஆயிரம், 1 எடை மெஷின் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, H-6 ஆர்.கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் இன்று (14.03.2023) காலை, ஆர்.கே நகர், கெனால் ரோடு எழில் நகர் பாலம் சந்திப்பு பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 5 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, ஒரு நபர் தப்பியோடவே, 4 நபர்களை மடக்கி பிடித்து காவல் குழுவினர் விசாரணை செய்தனர். விசாரணையில் மேற்படி நபர்கள் மெத்தம்பெட்டமைன் எனும் போதை பொருளை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
அதன்பேரில் சட்டவிரோதமாக விற்பனைக்காக மெத்தம்பெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த எண்ணூரைச் சேர்ந்த டார்வின் வின்சன், தண்டையார்பேட்டை வாசிம் ராஜா, 31, சௌபர் சாதிக், 32, வேணுகோபால், 46, ஆகிய 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 317 கிராம் மெத்தம்பெட்டமைன், 5 செல்போன்கள், ரொக்கம் ரூ.12,000-, 1 எடை மெஷின் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. வாசிம்ராஜா மீது, ஏற்கனவே 1 திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. மேலும் மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஒரு தலைமறைவு குற்றவாளியை காவல்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.