சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் காவல்துறையினர் நடத்திய சிறப்பு அதிரடி ரெய்டில் குட்கா தொடர்பாக 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 75 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 371 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள், 43.41 கிலோ மாவா, 1 சைக்கிள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 20.03.2022 முதல் 26.03.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 75 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 371 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 43 கிலோ 41 கிராம் எடை கொண்ட மாவா, 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிடும்படியாக டிபி .சத்திரம் காவல் நிலைய போலீசார் கடந்த 22.03.2022 அன்று டிபி சத்திரம் பகுதியில் கண்காணித்து குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த நெற்குன்றத்தைச் சேர்ந்த லட்சுமணப் பெருமாள் (52), கோயம்பேட்டைச் சேர்ந்த மாதவன் (35), அண்ணாநகர் தனசேகர் (41) ஆகிய மூவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 99 கிலோ 550 கிராம் குட்கா புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 25.03.2022 அன்று அரும்பாக்கம், ராணி அண்ணா நகர் பகுதியில் உள்ள வீட்டில் குட்கா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆனந்தன் (42), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 263 கிலோ 912 கிராம் குட்கா புகையிலைப் பொருட்கள், 1 செல்போன், மற்றும் 1 சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.