6ம் வகுப்பில் ‘ரம்மி’ குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கம்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
6ம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதை தடுக்கும் வகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழக அரசு தடை செய்துள்ளது. இதற்கான தடைச் சட்டம் கொண்டு வந்து கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்பு, 3வது பருவ கணித பாட புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை எப்படி விளையாடுவது என்பது குறித்த பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது. கல்வித்துறையே ரம்மி விளையாட்டை கற்றுத் தரும் வகையில் முகவுரை, விளக்கவுரையுடன் இந்த பாடப்பகுதி தரப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்றி கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை பாடபுத்தகத்தில் ரம்மி குறித்த பாடம் இருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி குறித்து நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக பாட புத்தகத்தில் இந்த பாடப்பகுதியை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கல்வியாண்டில் தான் இந்த பாடப்பகுதி இடம் பெற்று இருப்பதாகவும் அடுத்த கல்வியாண்டு முதல் ரம்மி விளையாட்டு குறித்த பாடப்பகுதி முழுவதுமாக நீக்கப்படும் என்றும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.