Take a fresh look at your lifestyle.

36 செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்–3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

42

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்திலிருந்து நேற்று அதிகாலை 12.07 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி.மார்க் 3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முன் தினம் நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.மார்க் 3 ராக்கெட் சுமார் 640 டன் எடை கொண்டது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் யந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்ட ராக்கெட் ஆகும். வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஒன்வெப் நிறுவனமானது உலக நாடுகளுக்கு அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் இந்த 36 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோமநாத் நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘தீபாவளி பண்டிகையை இஸ்ரோ தொடங்கிவிட்டது. செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 19 நிமிடத்தில் 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சந்திரயான் 3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. எனினும், சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அதனால் அவற்றை சிறிது காலத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம். பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்த கூடிய இரு காலங்களில் ஜூனை (2023 ம் ஆண்டு) தேர்வு செய்து அதனை விண்ணில் செலுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்’’ என கூறியுள்ளார்.