தமிழகம் முழுவதும் கடந்த 31 நாட்களில் நடந்த கஞ்சா மற்றும் குட்கா வேட்டையில் 449 டன் குட்காவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:–
தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் டிஜிபி சைலேந்திரபாபு நேரடி மேற்பார்வையில் ஆபரேஷன் 2.0 கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் இந்த ஆபரேஷன் தொடங்கியது.
அதன்படி கடந்த 31 நாட்களில், 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைக் கடத்தல் ஆசாமிகள் பயன்படுத்திய 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல 6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 449 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சிறப்பு நடவடிக்கையில் பல கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் மூன்று கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கிக் கணக்குகளும், 6 நிலம். வீட்டுமனை, வாகனம் போன்ற சொத்துக்களும் முடக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் முக்கியமான ஏழு கஞ்சா வியாபாரிகளின் 29 வங்கிக் கணக்குகளும், நான்கு நிலம், வாகனம் உட்பட்ட சொத்துக்களும் மற்றும் தேனி மாவட்டத்தில் ஆறு கஞ்சா கடத்தல் குற்றவாளிகளின் 8 வங்கிக் கணக்குகள், வீட்டுமனை, வாகனம் போன்ற சொத்துக்களும் முடக்கப்பட்டன.
அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த சிறப்பு நடவடிக்கையில் அதிகபட்சமாக போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் 963 கிலோ, ரயில்வே காவல் படை 734 கிலோ, திருவள்ளூர் மாவட்டத்தில் 208 கிலோ, சென்னை மாநகரத்தில் 186 கிலோ, நாகை மாவட்டத்தில் 168 கிலோ, கோவை மாவட்டத்தில் 161 கிலோ கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தடைசெய்யப்பட்ட குட்காவை பொருத்தவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 டன்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3.6 டன்களும், வேலூர் மாவட்டத்தில் 32 டன்களும் அதிகபட்சமாக கைபற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.