Take a fresh look at your lifestyle.

16 வயது சிறுமி சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரிப்பு: 3 ஆண்டு ஜெயில்: போக்சோ கோர்ட் தீர்ப்பு

34

கடந்த 2019ம் ஆண்டு மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் சமூக வலைதளம் மூலம் 36 வயது பெண்ணிடம் பழகியுள்ளார். பின்னர் அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த 36 வயது பெண் எதிரி, மேற்படி பெண்ணின் மகளான 16 வயது சிறுமியை ஆபாசமாக சித்தரித்து, தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுமியைப் பற்றி தவறான தகவலை பதிவிட்ட 36 வயது பெண் எதிரியை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (30.03.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்படி வழக்கில் எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேற்படி 36 வயது பெண் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000/-அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.