15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 8 பேருக்கு ஆயுள்: இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டு ஜெயில்
15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், இன்ஸ்பெக்டர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாக சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வண்ணாரப்பேட்டை காவல் நிலைய வழக்கில் 22 பேர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், இரு பெண்கள் உள்பட மற்ற 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், மாரீஸ்வரன் என்பவர் இறந்துவிட்டார். இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மதன்குமார், சாயிதாபானு, சந்தியா,செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா,விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், தனியார் தொலைக்காட்சி ஊழியர் வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண், எஸ்.பி.ஆர்.கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார்.
அதில், சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், மீதமுள்ள இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிவில் சப்ளைஸ் அதிகாரி கண்ணன், அனிதா, காமேஷ்வர்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, ராஜாசுந்தர் நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.