பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாளும் (14 ந் தேதி) பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 16 லட்சத்து 39 ஆயிரத்து 367 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: என் பேரன்பிற்குரிய 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம். என்ன பரீட்சை கவலையில் இருக்கிறீர்களா? ஒரு கவலையும் வேண்டாம், எந்த பயமும் வேண்டாம். இது இன்னொரு பரீட்சை, அவ்வளவு தான். அப்படித்தான் இதை நீங்கள் அணுக வேண்டும். எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை எழுதுங்கள். உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது இல்லை, உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு போவது, உயர்த்தி விடுவது. அதனால் மீண்டும் சொல்கிறேன், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். தேர்வைப் பார்த்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படியுங்கள். புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக, முழுமையாக எழுதுங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் போல நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். முதல்வராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துகிறேன். நல்வாழ்த்துகள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.