சென்னை, கிழக்கு தாம்பரம், பாரதமாதா தெருவைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் கார்த்தி (வயது 37). இவர் கடந்த 8ம் தேதியன்று தனது செல்போனில் யூடியூப் சேனல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது புதியதாக வந்த ‘புதிய அறிவிப்புகள்’ என்ற யூடியூப் சேனலில் ரேசன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் ரேசன் அட்டைக்கு 4 அதிரடி அறிவிப்புகள் என்ற தகவல் ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது. அதனைக் கண்ட கார்த்திக் அவரது வார்டான, கம்பர் தெருவில் உள்ள நியாய விலை கடைக்குச் சென்று அங்கிருந்த சேல்ஸ்மேன் சாலமன் என்பவரிடம் அது குறித்து விசாரித்துள்ளார். அப்போது யூடியூப் சேனலில் வந்த செய்தி பொய்யானது என்பது தெரியவந்தது. அதனையடுத்து கார்த்திக் அது தொடர்பாக சேலையூர் போலீசில் புகார் அளித்தார். உதவிக் கமிஷனர் முருகேசன் தலைமையிலான தனிப்படையினர் அந்த யூடியூப் சேனலின் உரிமையாளர் குறித்து சைபர்கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் இன்ஜினியரிங் பட்டதாரியான ஜனார்த்தன் (வயது 22) என்பவர் புதிய அறிவிப்புகள் என்ற யூடியூப் சேனலில் அந்த தகவலை பொய்யாக பதிவிட்டது தெரியவந்தது. அவரை இன்று காலையில் போலீசார் கிருஷ்ணகிரியில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு தனியார் டிவியில் அந்த செய்தியை பார்த்து அதை போட்டோ எடுத்து அதில் உள்ள வாசகத்தை படித்து யூடியூப்பில் பதிவிட்டது தெரியவந்தது. இது போன்ற செய்திகளை யூடியூப்பில் பதிவிட்டால் பதிவிட்டால் அதிக வியூவர்ஸ் பார்ப்பார்கள். அதனால் வருமானம் வரும் என்று பதிவிட்டதாக தெரிவித்தார்.
அதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.