ரூ. 56 கோடியில் 13 கோவில்களுக்கு ராஜகோபுரம், திருமண மண்டபம், குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 56 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 கோயில்களில் ராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணி யாள ர்கள் குடியிருப்பு, வணிக வளாகம், மலைப் பாதை சீரமைத்தல், மதிற்சுவர் கட்டுதல், ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் கட்டுதல் போன்ற 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். மேலும், அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 56 லட்சத்து 41 ஆயிரத்து 237 ரூபாய் மதிப்பிலான 19 புதிய வாகனங்களை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400 -க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த கோயில்களில் திருப்பணிகள், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதி உலா, குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் செயல் படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் ஒவ் வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கோரகுட்டை, இளையபெருமாள் வெங்கட் ரமணசுவாமி கோயிலில் 6.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, திருப்பூர் மாவட்டம், அய்யம் பாளையம், வாழைத் தோட்டத்து அய்யன் கோயிலில் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் மலைப்பாதையை சீரமைக்கும் பணி, ஊத்துக்குளி, வெற்றி வேலாயுத சுவாமி கோயிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடக்கு சுற்றுப் பிரகார மண்டபம் அமைக்கும் பணி,
சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி மற்றும் 1.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக் கட்டளைக்கு சொந்தமான இடத்திற்கு 10.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதிற்சுவர் கட்டும் பணி; தஞ்சாவூர் மாவட்டம், கண்டமங்கலம் வாத்தலை நாச்சியம்மன் கோயிலில் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் 4.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, சிக்கல் நவநீதேஸ்வரசுவாமி கோயிலில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, வெளிப் பாளையம், அகஸ்தீஸ்வரர் கோயிலில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி,
மயிலாடுதுறை மாவட்டம், திருப்புங்கூர், சிவலோகநாத சுவாமி கோயிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, திருவண்ணாமலை மாவட்டம், புதூர் செங்கம் மாரியம்மன் கோயிலில் 1.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரகார மண்டபம் மற்றும் கருங்கல் தரைதளம் அமைக்கும் பணி, வேலூர் மாவட்டம், வேலூரில் 2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் காமாட்சி அம்மன் கோயிலில் 1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மகா மண்டபம் கட்டும் பணி, கடலூர் மாவட்டம், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் 2.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; என மொத்தம் 56.18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கோயில்களின் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் 2021 -22 ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், “துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 108 புதிய ஊர்திகள் ரூ. 8 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்” என்று அறிவிக்கப் பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டல், கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை கண்டறிந்து அளவீடு செய்தல், கோயில்களின் திருப்பணிகளை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தரும் வகையில், முதற்கட்டமாக 5 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் 69 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 4.4.2022 அன்று முதலமைச்சரால் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக 1 கோடியே 56 லட்சத்து 41 ஆயிரத்து 237 ரூபாய் செலவில் 19 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக முதலமைச்சர் இன்று வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்திலிருந்து வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆகியோரும், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பாலாஜி, கலெக்டர் ராகுல்நாத் ஆகியோரும், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ந.கௌதமன், ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகத்தலைவர் உ. மதிவாணன், கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.