Take a fresh look at your lifestyle.

ரூ.24.71 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

76

திருவள்ளூர், சேலம், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.24.71 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று திறந்து வைத்தார். மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 81 புதிய பொலிரோ வாகனங்களையும் முதல்வர் வழங்கினார்.

கிராமப்புரங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும் ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு உரிய வசதிகளுடன் கூடிய புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008 ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 278 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு அதில் 199 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2 தளங்களுடன் கூடிய 17,324 சதுர அடி பரப்பளவு கொண்ட இக்கட்டடத்தில், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான அறைகள், பொறியியல் பிரிவிற்கென தனி அலுவலக இடம், கணினி அறை, எழுதுபொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவிலும், சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்தில் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் 2 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவிலும், மற்றும் விளாத்திகுளம் ஒன்றியத்தில் 3 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் – கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 2 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம் – மோகனூர் ஒன்றியத்தில் 2 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்;

திருவாரூர் மாவட்டம் – திருவாரூரில் 6 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 28,716 சதுர அடி பரப்பளவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு அலுவலர்களுக்கான தனித்தனி அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடம்; என மொத்தம் 24 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களையும், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், ஊரகப் பகுதிகளில் செயல்டுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களைத் திறம்படக் கண்காணித்திட‌ ஏதுவாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்குப் பழைய வாகனங்களுக்குப் பதிலாகப் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2021- 22 ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 24 மாவட்டங்களில் பணிபுரிந்துவரும் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் (சாலைகள் மற்றும் பாலங்கள்), உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், உதவி இயக்குநர், உதவித் திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆகிய அலுவலர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்கு 6 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 81 பொலிரோ வாகனங்களைவழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஊரக வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.