ரயிலில் சென்னைக்கு தப்பிய குற்றவாளி: சென்னை ரயில்வே போலீசார் பிடித்து கேரளா போலீசிடம் ஒப்படைத்தனர்
kerala crime accused secured in chennai central railway station by RPF
பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் கேரளாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் தப்பி வந்த முக்கிய குற்றவாளியை சென்னை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் உரிய சமயத்தில் பிடித்து கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தது பாராட்டைப் பெற்றுள்ளது.
கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், தடியட்டப்பரம்பரா என்ற காவல் நிலையத்தில் பெண்ணை மானபங்கப்படுத்தியது தொடர்பான வழக்கில் குற்றவாளி ஒருவர் பாலகாட்டில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தப்பி வந்துள்ளதாக கேரளா போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு கன்ட்ரோல் மூலம் அந்த குற்றவாளியின் அங்க அடையாளங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் அவர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி எனவும் அவரைப் பிடித்து ஒப்படைக்கும்படியும் கேரளா போலீசார் தகவல் அனுப்பினர்.
அதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் இன்ஸ் பெக்டர் மதுசாமி ரெட்டி தலைமையில் தனி போலீஸ் படை ரயில்களில் ஜல்லடை போட்டு கண்காணித்தனர். அதனைத்தொடர்ந்து மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 3.35 மணியளவில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சம்பந்தப்பட்ட குற்றவாளி அமர்ந்திருப்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்ததில் அவர் தான் குற்றவாளி என்பதை ஒப்புக் கொண்டார். அவரைப் பிடித்து சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வந்த போலீசார் அது தொடர்பாக தடியட்டப்பரம்பா காவல் நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். உடனடியாக கேரளா போலீசார் சென்னைக்கு வந்து அந்த குற்றவாளியை கேரளாவுக்கு உரிய பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பெண்ணை மான பங்கப்படுத்திய முக்கிய வழக்கில் தப்பி வந்த முக்கிய குற்றவாளியை பிடித்துக் கொடுத்த சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே போலீசாரை கேரளா போலீசார் நன்றி தெரிவித்தது மட்டுமின்றி பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.