சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜீவ், மாநகராட்சி துப்புரவு தொழிலாளி கோகிலா தம்பதியின் மகள் ஹர்ஷினி (வயது 9). கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு புறப்பட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நோக்கி, தனது தந்தையின் தோளில் அமர்ந்திருந்த ஹர்ஷினி, ‘தாத்தா… சென்று வாருங்கள் தாத்தா….’ என்று கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதிலுக்கு கை அசைத்து ‘டாட்டா’ காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் சிறுமியை வெகுவாக பாராட்டினர்.
இந்த நிலையில், சிறுமி ஹர்ஷினிக்கு ‘ஹீமோபிலியா’ என்ற அரிய வகை ரத்தம் உறையா நோய் இருப்பது குறித்த வீடியோ ஒன்றும் வெளியானது. அவருக்கு உடலில் சிறிய காயம் ஏற்பட்டாலே ரத்தம் நிற்காமல் வெளியேறும் என்று அந்த வீடியோவில் அவரது பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஹர்ஷினி மற்றும் அவரது பெற்றோரை தனது இல்லத் துக்கு வரவழைத்து விவரங்களை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, ஹர்ஷினிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை யடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சிறுமி ஹர்ஷினி சந்தித்து, தனக்கு தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹர்ஷினியின் பெற்றோர் ராஜூ மற்றும் கோகிலா உடனிருந்தனர். இன்று ராஜீவ் காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் ஹர்ஷினி சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை மா.சுப்பிரமணியன் செய்திருந்தார்.