யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்களில் பதிவாகும் குற்றங்களை கண்காணிக்க தமிழக காவல்துறையில் சமூக ஊடகக்குழு தொடங்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ‘‘யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்து, வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்க ளையும், காவல் துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களைக் காவல்துறை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. –அதே போல இணைய வழியில், பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் தேவையும் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
அதற்காக சென்னை உட்பட 9 கமிஷனரேட்டுக்கள் மற்றும் 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட “சமூக ஊடகக் குழுக்கள்” அமைக்கப் பட்டுள்ளன. கணினிசார் திறன், சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தெரிவு செய்யப்பட்டு, இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இயங்கும். பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும், அவர்களின் சமூக ஊடகக் கணக்குளை முடக்கவும், கணினிசார் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கும் இக்குழு துரிதமாக செயல்படும். இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத, அரசியல் மோதல்களைத் தடுத்திடவும் இக்குழு உதவும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.