மெரீனா கடற்கரையில் குதிரை ஓட்டுபவர்களுக்கு தனி சீருடை, அடையாள அட்டை * கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை
new ID card for horse riders chennai police introduced
சென்னை மெரீனா கடற்கரையில் குதிரை சவாரி செய்யும் குதிரை ஓட்டிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு தனி அடையாள அட்டை மற்றும் தனி சீருடை வழங்கி சென்னை நகர கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்ற பெயர் பெற்றது. சுமார் 13 கி.மீ. நீளம் கொண்ட மெரினா இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது நாள்தோறும் சுற்றுலா பயணிகளும் சென்னை வாசிகளும், வெளியூர் வாசிகளும் வந்து குவியும் மிகச்சிறந்த சுற்றுலா தளமாக
விளங்கி வருகிறது. மேலும் இங்கு குவியும் மக்களை மகிழ்விப்பதற்காக குதிரை சவாரியும் நடக்கிறது. ஒரு ரவுண்டுக்கு ரூ, 50 முதல் 200 வரை குதிரை சவாரி செய்யும் நபர்கள் வசூலிக்கின்றனர்.
முக்கியமாக குடும்பத்துடன் மெரீனா கடலுக்கு பொழுதுபோக்குக்காகவும், கடலையும் ரசிக்க வருபவர்கள் தங்கள் குழந்தைகள், சிறுவர்களை குதிரையில் சவாரி ஏற்றி மகிழ்கின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மெரீனாவில் கூட்டம் கூடும் சமயங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடந்து விடுகின்றன. மேலும்
குதிரையில் ஏறும் குழந்தைகள், சிறுவர்கள் காணாமல் போகவும், பல குற்றங்கள் நடக்கவும் ஏதுவாகிறது. இதனால் குதிரை சவாரி தொடர்பாக குதிரையை வைத்து தொழில் செய்யும் நபர்களை வரைமுறைப்படுத்தவும், அவர்களை கண்காணிக்கவும் சென்னை நகர காவல்துறை புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணைக்கமிஷனர் பிரபாகர் மற்றும் மயிலாப்பூர் துணைக்கமிஷனர் திஷா மிட்டல் மேற்பார்வையில் குதிரை ஓட்டிகள் எத்தனை பேர் உள்ளனர். அவர்களது பெயர் விவரம் அடங்கிய பட்டியலை தயாரித்து அதன் மூலம் அவர்களுக்கு தனி அடையாள எண்ணுடன் கூடிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவர்களுக்கு தனி சீருடையும்
வழங்கி காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. குதிரை ஓட்டிகள் தொடர்பாக தனி பதிவேட்டையும் காவல்துறையினர் தயார் செய்து அதனை பராமரித்து வருகின்றனர்.
மேலும் குதிரை ஓட்டிகளுக்கு சாம்பல் நிற பேண்ட், மஞ்சள் நிற டீ ஷர்ட், மஞ்சள் நிற தொப்பியும் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் உதவிக்கமிஷனர் சீனிவாசன் தலைமையில் நேற்று அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மெரீனா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் குதிரை சவாரி செய்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர். மயிலாப்பூர் உதவிக்கமிஷனர் சீனிவாசன் மெரீனாவுக்கு வரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று குதிரை ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.