முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலைய உள்வளாகத்தில் அவர் இறங்கிய பின்னர், அங்கிருந்து வெளியே வருவதற்காக சிறிய பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பஸ்சில் எடப்பாடி பழனிசாமி நின்றபடி பயணம் செய்தபோது, பஸ்சில் அவருடன் பயணித்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ராஜேஸ்வரன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார். அவர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி வீடியோவும் எடுத்துக்கொண்டே எதிர்ப்பு கோஷமிட்டார்.
உடனே, பஸ்சில் வந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், வீடியோ எடுத்தவரை தடுத்தார். இந்த விவகாரம் சர்ச்சையானது. மேலும், இதுசம்பந்தமான வீடியோவும் வலைத்தளங்களில் பரவியது. இதற்கிடையே ராஜேஸ்வரன் அவனியாபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில், அவரது பாதுகாவலர் மற்றும் சிலர் என்னை தாக்கியதுடன் செல்போனையும் பறித்துச் சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும் அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் மீது ஆபாசமாக தரக்குறைவாக பேசுதல், தாக்க முயற்சி என்ற இருபிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் ராஜேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் அரவிந்தன் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி தாக்குதல், செல்போன் பறிப்பு, காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகரை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரையில் அண்ணா திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட கழக சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டான அருகே இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளர்கள் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு தி.மு.க. அரசு மீதான எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி கண்டன முழக்கங்களை தெரிவித்தனர்.