முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நிருபர்களிடம் பேசும்போது, ‘‘மு.க.ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர். தனிப்பட்ட முறையில், மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்தித்தேன். இந்த சந்திப்பு குறித்து முன்கூட்டியே தீர்மானிக்கப்படவில்லை என்ற போதிலும் சென்னைக்கு வந்த பின்பு மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி செல்ல முடியும்? மு.க.ஸ்டாலினை சந்திப்பது எனது கடமை’ என்றார்.
இதன்பின்பு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மம்தா பானர்ஜி அளித்த பதில் வருமாறு:-
* இந்த சந்திப்பு விரைவில் அரசியல் சந்திப்பாக நீடிக்குமா?
இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது ஏதாவது பேசத்தான் செய்வார்கள். அரசியல் இல்லாமலும் இருக்கலாம். மேம்பாட்டு பணிகள் சம்பந்தமான பேச்சுவார்த்தையாகவும் இருக்கலாம். அரசியலை விட மேம்பாடு சிறந்ததாக உள்ளது.
* தமிழகத்திலும், மேற்கு வங்காளத்திலும் கவர்னர்கள் தொடர்பான சில பிரச்சினைகள் உள்ளன. அது சம்பந்தமாக இந்த சந்திப்பின்போது எதுவும் பேசப்பட்டதா?
இல்லை. அதைப்பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இது தனிப்பட்ட, மரியாதை நிமித்தமான, சகோதரர் சகோதரி என்ற அடிப்படையிலான எங்களுக்கு இடையேயான உறவின் நிமித்தமான சந்திப்பு தான். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பா அல்லது சமூக ரீதியான சந்திப்பா அல்லது கலாசார ரீதியான சந்திப்பா என்பதை உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.