மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆதாரை இணைக்காவிட்டால் 1 யூனிட்டுக்கு ரூ. 8 செலுத்த வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின்கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கை யாளர்களுக்கும் கட்டணம் செலுத்தும் நாளிலிருந்து 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், ஆதார் இணைக்கும் வரை நுகர்வோர் ஆப்லைன், ஆன்லைன் முறைகள் மூலம் பணம் செலுத்த முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின்சார அதிகாரி கூறுகையில், முற்றிலும் தரவுகளைச் சேமிக்கும் அடிப்படையிலேயே ஆதார் எண் இணைக்க கேட்டுப்பட்டுள்ளது. ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை; ஒரே ஆதார் எண்ணைக் கொண்டு வெவ்வேறு மின் இணைப்புகளை இணைக்கலாம். இறந்தவர்கள் பெயரில் மின் இணைப்பு இருந்தால், பெயர் மாற்றம் செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மானியங்கள் ரத்து செய்யப்படும் என எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி கூறியதாவது:-
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மின் கட்டணம் செலுத்தும் இடங்களில் தனியாக கூடுதல் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். உரிமையாளர்தான் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. யாரிடம் வேண்டு மானாலும் ஆதாரை கொடுத்து அனுப்பலாம். ஆதாரை கொண்டு வருபவர் தனது செல்போன் எண்ணை சொன்னாலும் அந்த ஓ.டி.பி.யை வைத்து பதிந்து விடலாம். 2 கோடியே 30 லட்சம் வீட்டு உபயோகிப்பாளர்களில் இதுவரை 5½ லட்சம் பேர் மட்டுமே ஆதாரை இணைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு எந்த சிக்கலும் கிடையாது. அதேபோல் பொது பயன்பாடு மீட்டரை 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் வைத்துள்ளனர். அவர்கள் முழு தொகையை கட்டணமாக செலுத்துவதால் அவர்களுக்கும் பிரச்சினை இல்லை.
வீட்டு உபயோகத்தில் 2 கோடியே 30 லட்சம் மீட்டருக்கு 100 யூனிட் மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்புதான் என்ற அடிப்படையில் ஆதாரை இணைக்க சொல்கிறோம். சப் மீட்டர் வைத்திருந்தால் அது எங்கள் கணக்கில் வராது. முழு ரீடிங்தான் கணக்கில் எடுக்கப்படும். ஆனால் தனித்தனி வீடாக இருந்து தனித்தனி சர்வீஸ் வாங்கி இருந்தால் அந்த வீடுகளுக்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு பகுதிகளில் ‘காமன்’ வராண்டா, மொட்டை மாடி, காம்பவுண்டு பகுதிகளில் உள்ள மின் விளக்குகளுக்கு தனியாக மீட்டர் வைத்திருந்தால் அதற்கு மானியம் கிடையாது. முழு தொகையை தான் செலுத்த வேண்டும்.
அதாவது முழு தொகையையும் செலுத்தும் அந்த மீட்டருக்கு ஆதார் எண்ணை பதிய வேண்டியதில்லை. ஒரு வீட்டில் ஒரே பெயரில் 2 மின் இணைப்பு இருந்தால் அதை ஆதார் மூலம் கண்டறிந்து ஒரு மீட்டராக கணக்கில் கொண்டு வருவோம். இல்லையென்றால் இன்னொரு மீட்டர் அவசியம் என்றால் அதற்கு பொது பயன்பாடு கட்டணமாக யூனிட் 8 ரூபாய் கணக்கில் வரும். ஒருவருக்கு வெவ்வேறு முகவரியில் பல வீடுகள் இருந்தால் அதற்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும். எனவே பொது பயன்பாட்டில் முழு தொகையையும் செலுத்துபவர்கள், வணிக பயன்பாட்டில் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆதாரை இணைக்க வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.