சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில், மாணவர்களுக்கான பாதுகாப்பான சாலைகள் என்ற தலைப்பில்
நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமினை கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
இந்தியாவின் எதிர்காலத்தை நிமிர்ந்து எழச் செய்யும் தூண்களில் ஒன்றாக விளங்கும்
மாணவ சமுதாயம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியாகும். முக்கியத்துவம் வாய்ந்த மாணவ
சமுதாயம் சில சமயங்களில் சாலை விபத்துக்களைச் சந்திப்பது கவலையளிக்கிறது.
இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கவும், நமது சாலைகளைப் பாதுகாப்பாக மாற்றவும்,
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை ” தோழன்” அமைப்புடன் இணைந்து 100
பள்ளிகளில் போக்குவரத்து விதிகள், மற்றும் கோல்டன் ஹவர் குறித்த
மெகா விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று
காலை (18.04.2022) சேத்துப்பட்டு 14/06 பள்ளியில், மாணவர்களுக்கு பாதுகாப்பான
சாலைகள் என்ற தலைப்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை சென்னை
பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்து
சிறப்புரையாற்றினார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் 18.04.2022 முதல் 22.04.2022 வரை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் சென்னை முழுவதும் உள்ள 1௦௦
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை உள்ளடக்கிய 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை
நேரடியாகவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் மறைமுகமாகவும் சென்றடையும்.
போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதும், பள்ளி மற்றும் கல்லூரி மண்டலங்களை
பாதுகாப்பானதாக மாற்றுவதும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் போக்குவரத்து
விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மற்றும் எதிர்காலத்தில் விபத்தில்
பாதிக்கப்படும் நபர்களுக்கு தயக்கமின்றி உதவ மக்களை ஊக்குவிப்பதும் இந்த
பிரச்சாரத்தின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.
தொடர்ச்சியான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் மூலம், சாலைப் பாதுகாப்பு
குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும், எண்ணற்ற உயிர்களைக்
காப்பாற்றவும் இது உதவும் என்று உறுதியாக நம்புகிறோம். இந்த உன்னதமான
நோக்கத்திற்கு உதவ முன் வந்த தோழன் அமைப்புக்கு சென்னை பெருநகர காவல் துறை
சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து)
கபில் குமார் சி.சரத்கர், இணைக்கமிஷனர் ராஜேந்திரன்,
போக்குவரத்து துணை ஆணையாளர்கள் ஓம்பிரகாஷ்
மீனா, சுரேந்திரநாத் (போக்குவரத்து திட்டமிடல்), தோழன்
அமைப்பு நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.