போதை ஒழிப்பு தொடர்பாக கமிஷனர் சங்கர்ஜிவால் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாய்வு
commissioner shankar jiwal IPS., meetting with higher officials
சென்னை நகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக கமிஷனர் சங்கர்ஜிவால் தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த 11.08.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம் எனவும் போதை பொருட்கள் ஒழிப்பதற்கு உதவுவதாகவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி சென்னை பெருநகரில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னையில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை பெருநகரில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன், பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள், LSD ஸ்டாம்பு, போதைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகள் ஆகியவற்றை கடத்தி வருபவர்களையும், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) என்ற சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக, கமிஷனர் சங்கர்ஜிவால் தலைமையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல் ஆய்வாளர்கள் முதல் கூடுதல் ஆணையாளர் வரையிலான காவல் அதிகாரிகளுடன் போதை பொருள் ஒழிப்பு குறித்து கலந்தாய்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) என்ற சிறப்பு தணிக்கையை மேலும் தீவிரபடுத்த, காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கவும், வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க, சென்னை பெருநகரின் எல்லைகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளவும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் காவல் குழுவினர் மூலம் தீவிரமாக கண்காணித்து, இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்க, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கவும், அவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்கவும், குற்றவாளிகளின் சொத்து விவரங்களை சேகரித்து முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் நபர்களை கண்காணித்து கைது செய்யவும் உரிய சட்ட நடவடிக்கைகளை விரைந்து செய்ய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் திருந்தி வாழ்வதற்கு முற்படும் போதை பொருள் வழக்கு குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று, கண்காணிக்கவும், அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும் இக்கலந்தாய்வில் கலந்தாலோசிக்கப்பட்டது. போதை பொருள் மற்றும் இதர வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல் அதிகாரிகள் அல்லது ஆளிநர்கள் யாரேனும் செயல்பட்டுள்ளது தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் போதை பொருட்களின் தீமை குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்திடும் வண்ணம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் காவல்துறை சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா (தெற்கு), அன்பு (வடக்கு), இணைக்கமிஷனர்கள் ராஜேஷ்வரி (மேற்கு), நரேந்திரன் நாயர் (தெற்கு), ரம்யா பாரதி (வடக்கு) மற்றும் அனைத்து துணைக்கமிஷனர்களும் கலந்து கொண்டனர்.