தமிழகத்தில் போக்குவரத்து வசதிகளை பெருக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சரும், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (17 ந் தேதி) சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டத்தில் பேசியதாவது:
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தினுடைய முதலாவது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதன் பணிகளை சிறப்பான முறையிலே துவக்கியுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை நகர போக்குவரத்து நெரிசல் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டுப் பெருக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் புதிய தொழில்நுட்பங்களை, எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும். பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாக கட்டமைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதே அளவுக்குக் குறையும். எனவே பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது தனது பணிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
இதில் நான் குறிப்பாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்றும் இந்த தருணத்தில் கேட்டுக்கொண்டு, மீண்டுமொரு முறை இந்த அமைப்பின் தலைவர் என்ற முறையிலே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்