புதுவை முதல்வர் கவர்னருக்கு அடங்கி ஒடுங்கி போகிறார், பொம்மை முதல்வராக இருக்கிறார் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று 12.12.2022 புதுச்சேரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சிவக்குமாரின் இல்ல மண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘போட்டி போட்டுக் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். போட்டி இருக்க வேண்டும், பிரச்சனை இருக்க கூடாது, அப்போதுதான் கட்சி வளரும். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அங்கே ஒரு பெரிய மாற்றம் அங்கே உதயசூரியனின் ஆட்சி மலர்ந்துள்ளது. மலர்ந்திருக்கக் கூடிய இந்த ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் திராவிட மாடல் ஆட்சி என்று இன்றைக்கு பெருமையோடு சொல்கிறோம். அப்படிப்பட்ட ஒரு திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது தேவைதான். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதுகூட அந்த வாய்ப்புக் கிட்டிருக்கும். ஆனால் போய்விட்டது, அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போது இதே புதுவை மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அது மக்களுக்காக நடைபெறுகிறதா? ஒரு முதலமைச்சர் என்று ஒருத்தர் இருக்கிறார். உயர்ந்த மனிதர்தான். உயரத்தில், ஆனால், அடி பணிந்து கிடக்கிறார். பொம்மையாக ஒரு முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நான் அவரை குறைசொல்ல விரும்பவில்லை. நல்லவர் தான். ஆனால் நல்லவர், வல்லவராக இருக்க வேண்டாமா? இல்லையே, ஒரு கவர்னர் ஆட்டிப்படைக்கக்கூடிய வகையில் புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது என்று சொன்னால், வெட்கப்பட வேண்டாமா? அதை கண்டு வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா? ஆனால் அடங்கி ஒடுங்கி போயிருக்கக்கூடிய நிலையில் இன்றைக்கு ஒரு ஆட்சி நடக்கிறதென்பது இந்த புதுவை மாநிலத்திற்கு மிகப் பெரிய இழுக்காக அமைந்திருக்கிறது. ஏதாவது ஒரு நன்மை நடந்திருக்கிறதா என்றால் இல்லை.
அப்படிப்பட்ட நிலையில், புதுவை மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கக்கூடிய நேரத்தில்தான் நம்முடைய தோழர்கள், நிர்வாகிகள் எல்லாம் இங்கு நம்முடைய ஆட்சியாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள். அதில் தவறில்லை. ஏற்கனவே, நாம் ஆட்சியில் இருந்தவர்கள்தான். பாரூக் தலைமையில் தி.மு.க. ஆட்சி இதே புதுவை மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. டி.ராமச்சந்திரன் தலைமையில், இதே புதுவை மாநிலத்தில் நம்முடைய ஆட்சி நடைபெற்றிருக்கிறது. ஜானகிராமன் தலைமையில் தி.மு.க. ஆட்சி இதே புதுவை மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. நிச்சயமாக, தி.மு.க.வினுடைய ஆட்சி மீண்டும் புதுவை மாநிலத்தில் உதயமாகும் அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.
காங்கிரஸ் கட்சியினுடைய முதலமைச்சராக வைத்தியலிங்கம் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்க வில்லையா? நாராயணசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நம்முடன் இணைந்து நடக்கவில்லையா? நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, நிச்சயமாக உறுதியாக புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக்கூடாது அதில் நாம் கண்ணும் கருத்துமாக இருந்தாக வேண்டும். விரைவில் நாம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். புதுவை மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு இப்போதே நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்களுடைய பணிகள் தொடங்குங்கள், தொடங்குங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் நேரத்தில் யார் கூட்டணி, எப்படி கூட்டணி அது எந்தவகையில் அமையப் போகிறது என்பது அப்போது முடிவெடுக்கப்படும். அது வேறு. ஆனால் வெற்றிக்கு இப்போதே நாம் அச்சாரமாக நமது கடமையை நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் என்று இந்த நேரத்தில் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், விழுப்புரம் மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், புதுவை மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் காரைக்கால் நாசிம், அனிபால் கென்னடி, சம்பத், நாகத்தியாகராஜன், செந்தில், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், புதுச்சேரி மாநிலத்தினுடைய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.