பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களை வழங்கினார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கலுக்கான பரிசுத் தொகுப்பை வாங்க ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் குவிவதைத் தடுக்க இன்று முதல் முதல் 8 ந்தேதி வரை வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெறுகிறது. தெருவாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில், தினமும் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடை பணியாளர்கள், இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள டோக்கன்களை வீடு வீடாகச் சென்று வழங்கினார்கள். 9ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், கலெக்டர்கள் பொங்கல் தொகுப்பை வழங்குகிறார்கள். இதனையடுத்து டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பை வாங்கி செல்லலாம்.