சென்னையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் உள்ளடக்கி காவலர்களுக்கு போக்சோ வழக்குகளை மேலும் திறம்பட கையாளும் வகையில் 9 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ சட்டப்பிரிவுகளில் பதிவு செய்யப்படும். வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு மேற்கொள்ளவும், வழக்குகளில் தொய்வு ஏற்படாத வண்ணம் மேலும் திறம்பட புலனாய்வு மேற்கொள்ளவும், பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி முகாமை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் மாநில நீதித்துறை அகாடமி இயக்குனர் லிங்கேஸ்வரன், பெண்கள் உதவி மையத்தைச் சேர்ந்த ஷெரின் போஸ்கோ, மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சந்துரு, பெண் வழக்கறிஞர் ஆதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்த விளக்கங்கள், விசாரணை அதிகாரிகள், போக்சோ சட்டப்பிரிவு வழக்குகளின்போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் குறித்தும், நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, புலனாய்வு மேற்கொள்ளுதல், கோப்புகள் கையாளுதல், பாதிக்கப்பட்ட சிறுமிகளை கையாளுதல், அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளதல் உட்பட இந்த வழக்குகளின் முழு புலனாய்வு முறை குறித்து பயிற்சியினை அளித்து காவல் அதிகாரிகள் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளித்தும் வருகின்றனர்.
பயிற்சி வகுப்புக்கு முன்னதாக மேடையில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போக்சோ வழக்குகளை மேலும் திறம்பட புலனாய்வு செய்யும் வகையில், வழக்கை விசாரிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் குறித்து விளக்கி, சந்தேகங்களை தெளிவுபடுத்தும் பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் உள்ளடக்கு அடுத்த 9 நாட்கள் பயிற்சி வகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியை நீதிபதி, சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என அனைத்துதுறை அனுபவம் மிக்கவர்களையும் வைத்து நடத்தி வருவதாகவும் தெரிவித்த அவர், இதில் காவல்துறையினர் தங்களுக்கு போக்சோ வழக்குகளில் எழும் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் எனவும் கூறினார்.
மேலும், சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு Good Touch, Bad Touch உள்ளிட்ட அனைத்து விழிப்புணர்வுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், போக்சோ வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதாகவும், போக்சோ வழக்குகளை கையாளும் முறை குறித்து இந்த வகுப்பை பயன்படுத்தி பங்கேற்றுள்ள அனைத்து காவல் துறையினரும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.