பெங்களூரில் சர்வதேச விமான கண்காட்சியை துவக்கி வைத்து, விமானங்களின் சாகசத்தையும் பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
பெங்களூர் எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த கண்காட்சி 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “புதிய இந்தியாவின் திறமைக்கு பெங்களூரின் இன்றைய வான்வெளியே சாட்சியாக உள்ளது. புதிய உயரங்களே புதிய இந்தியாவின் முகம் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது. தேசம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. பெருகிவரும் இந்தியாவின் திறமைக்கு “ஏரோ இந்தியா 2023” ஓர் உதாரணமாகும். இந்த கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்று உள்ளன. இது உலகநாடுகள் மத்தியில் இந்தி யாவின் மதிப்பு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து 700க்கும் அதிமான பங்கேற்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். இது கடந்த காலத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. இந்த ஏரோ இந்தியா கண்காட்சி இந்தியாவின் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டு களாக இது வெறும் விமான கண்காட்சியாக மட்டுமே இருந்தது. இன்று இது வெறும் கண்காட்சி மட்டும் இல்லை. இது இந்தியாவின் பலம். இது இந்தியாவின் பாதுகாப்புத்துறை மற்றும் தன்னம்பிக்கையின் நோக்கங்களில் கவனம் செலுத்துகிறது. பல ஆண்டுகளாக பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா தற்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. 2024 25க்குள் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியானது 5 பில்லியன் டாலராக இருக்கும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.