பூக்கடையில் இருசக்கர வாகன கொள்ளை கும்பல் கைது: 9 பைக்குகள் பறிமுதல்
two wheeler theft accusedes arrested in flower bazaar
சென்னை பூக்கடையில் இருசக்கர வாகன கொள்ளை கும்பலைச் சேர்ந்த 4 பேரை சென்னை பூக்கடை போலீஸ் துணைக்கமிஷனரின் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பெரம்பூர், முத்துநகர் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (22). இவரது தந்தை சேகர் சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உணவு கொடுக்க வெங்கடேஷ் கடந்த 30ம் தேதியன்று இரவு 8.30 மணிக்கு தனது யமஹா ஆர் 15 பைக்கில் ஜிஎச்சுக்கு வந்தார். பைக்கை ஆஸ்பத்திரியில் உள்ள டவன் ஒன் பிளாக் பின்புறம் நிறுத்திவிட்டு உணவு கொடுக்க சென்றுள்ளார். மீண்டும் 11 மணிக்கு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் அது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பூக்கடை துணைக்கமிஷனர் மகேஷ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சித்தார்ராய் தலைமையில் தலைமைக்காவலர்கள் முதபாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு நடத்தினர்.
அதனையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல பைக் திருடர்கள் கொடுங்கையூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அசாருதின் (வயது 29), கொடுங்கையூரைச் சேர்ந்த பயாஸ் (வயது 19), சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த ராஜசேகர் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பல்சர் பைக்குகள், ஹீரோ ஹோண்டா ஸ்பெலன்டர் 2, ஹோண்டா ஆக்டிவா 2, ஒரு ஹீரோ ஹோண்டா பாஸ்ஸன் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத டியோ என மொத்தம் 9 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.