சென்னை புழல் மத்திய சிறையில் கனரக தொழில் கூட சலவை இயந்திரம் பயன்பாட்டை சிறைத்துறை இயக்குனர் டிஜிபி அமரேஷ் புஜாரி துவங்கி வைத்தார்.
தமிழக மத்திய சிறைகளில் சிறைவாசிகளின் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. இன்னிலையில் சுகாதார நிலை ஒரே அளவில் பராமரிக்க முடியாத சூழல் இருந்து வந்தது. இதனை களையும் வகையில் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி புதிய நடவடிக்கையை மேற்கொண்டார். அதன்படி இயந்திரம் மூலம் துவைக்கும் வசதி அனைத்து மத்திய சிறைகள் மற்றும் மகளிர் சிறைகளில் ரூ. 60 லட்சம் செலவில் 15 சலவை இயந்திரங்கள் கொள்முதல் செய்து சிறைகளில் நிறுவப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை புழல் மத்திய சிறை 1 ல் கனரக சலவை இயந்திரம் செயல்பாடு நேற்று முதல் தொடங்கப்பட்டது.
தமிழக சிறைத்துறை இயக்குனர் டிஜிபி அமரேஷ் புஜாரி தண்டனை சிறைவாசியான பிரேம்குமார் என்பவர் மூலம் சலவை இயந்திரத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை சரக சிறைத்துறை டிஐஜி முருகேசன், மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரேன், கிருஷ்ணராஜ், சிறை அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.