முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்ட ங்கள் மற்றும் துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
2022- 2023ம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளை நடைமுறைபடுத்துவது குறித்தும், கள்ளர் சீரமைப்பு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் , 11-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கும் திட்டம், விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு சீருடைகள் வழங்கும் திட்டம், மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு சலவைப்பெட்டிகள் மற்றும் தையல் யந்திரங்கள் வழங்கும் திட்டங்கள், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், வீடற்ற ஏழை, எளியவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம், நரிக்குறவர் நல வாரியம், சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கடனுதவி திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும் தொடர்பாகவும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கண்ட திட்டங்களை எவ்வித தொய்வும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்திடுமாறும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விடுதிகளை நன்முறையில் பராமரிப்பு செய்து மாணாக்கர்கள் தங்கும் வகையில் உகந்த சூழலை உருவாக்குமாறும், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் பணிபுரிய வேண்டும் எனவும் அலுவலர் களுக்கு அறிவுரைகளை அமைச்சர் வழங்கினார்.
இக்கூட்டத்தின் போது,2021 -22ம் ஆண்டில் சிறந்த முறையில் பணியாற்றிய மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் காசோலையை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். ஆய்வு கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, துறை ஆணையர் இரா. நந்தகோபால், சிறப்பு செயலர் வா.சம்பத், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் துறைமுகம் காஜா, மேலாண்மை இயக்குநர் அணில் மேஷ்ராம் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.