பிரபல செக்யூரிட்டி நிறுவனத்தில் ரூ. 4.42 கோடி மோசடி: முன்னாள் மேலாளரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்
சென்னையில் உள்ள பிரபல செக்கியூரிட்டி நிறுவனத்தில் ரூ 4.42 கோடி மோசடி செய்த முன்னாள் மேலாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை சாலிகிராமத்தில் Bulldyers Integrated Solutions Pvt., Ltd, என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீநாதரெட்டி தனது நிறுவனத்தில் அவரது அக்கா மகன் ஸ்ரவன்குமார் (29) என்பவரை நம்பிக்கையின் பேரில் கடந்த 2017 ஆம் ஆண்டு மேலாளராக பணியமர்த்தியுள்ளார். ஸ்ரீநாதரெட்டி பணி நிமித்தம் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் நிறுவனத்தின் மொத்த பொறுப்புகளையும் ஸ்வரன்குமார் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரானா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 2020-2021 வரை ஸ்வரன் குமார் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் பொது முடக்கம் முடிந்த பின்னரும் மார்ச் மாதம் 2021க்கு பிறகும் ஸ்வரன் குமார் பணிக்கு வரவேண்டியவர் வராமல் இருந்துள்ளார்.
எனவே ஸ்ரீநாதரெட்டி தனது கணக்காளர்கள் மூலம் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், கடந்த 01.01.2018 முதல் 11.05.2021 வரையிலான காலகட்டத்தில் ஸ்வரன்குமார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிறுவனம் அரசுக்கு கட்ட வேண்டிய GST, வருமான வரி பணத்தை நிறுவனத்தின் கணக்கில் கட்டியது போல போலியான ஆவணங்கள் தயார் செய்து ரூ. 4,42,14,312 பணத்தை தனது சொந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக ஸ்ரீநாதரெட்டி கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் ஆந்திரா, சித்தூரில் பதுங்கியிருந்த ஸ்வரன் குமாரை எஸ்ஐ லோகேஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர் 7.03.2022 அன்று கைது செய்தனர். நேற்று (08.03.22) எழும்பூர் கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.