பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் வரை பாகிஸ்தான் இந்தியா இடையே நல்லுறவு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தி டெலிகிராப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது:- இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகம் மேற்கொண்டால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும். ஆனால் காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக இருந்தது. இப்பிரச்சினையை தீர்ப்பது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் பாரதீய ஜனதா அரசாங்கம் மிகவும் கடுமையானது. அவர்கள் பிரச்சினைகளில் தேசியவாத நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். பாகிஸ்தான் -இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருக்கும் போது அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பில்லை என்ற நிலை ஏமாற்றம் அளிக்கிறது. 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது இந்தியாவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவுகளை விரும்புவதாக இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.