Take a fresh look at your lifestyle.

நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும் – நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

60

அண்ணா தி.மு.க.வில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்த தி.மு.க. நினைக்கிறது. அண்ணா தி.மு.க. ஒன்றாகதான் இருக்கிறது என்பதை இந்த நாமக்கல் பொதுக்கூட்டம் காட்டுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் அதிமுக 51 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது.  முன்னதாக பிரமாண்டமான அதிமுக கொடியை எடப்பாடி ஏற்றி வைத்தார். இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“அண்ணா திமுக தோன்றியதிலிருந்து இன்றுவரை தமிழகம் ஏற்றம் பெறுவதற்காக ஏராளமான திட்டங்களை நாம் செயல்படுத்தினோம். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், இந்த இயக்கம் அழிந்துவிடும், சிதைந்துவிடும் என்று கனவு கண்டவர்கள், அந்த கனவையெல்லாம் தவிடுபொடியாக்கிய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் நிலைநாட்டிக் காட்டினார். அப்போது சதிகாரர்கள் எவ்வளவோ சதி செய்தார்கள். அந்த துன்பங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு நமக்கு இன்பம் தந்த தலைவிதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தார்கள். தற்போது ஆட்சியில் எப்படி முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தார்களோ, அதேபோல வழக்கு தொடர்ந்தார்கள்.

திமுகவால், அதிமுகவை எதிர்க்க முடியாத நிலை வருகின்றபோது அவர்கள் நம் மீது வழக்குப்போடுவதுதான் தொடர்கதையாக இருக்கிறது. அன்றுமுதல் இன்றுவரை அதைத்தான் கடைபிடிக்கிறார்கள். நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பு, திராணி இல்லாத கட்சி திமுக. அரசியல் ரீதியாக நம்மை அவர்கள் எதிர்கொள்ள முடியாது. ஏதாவது ஒரு கொல்லைப்புறத்தின் வழியாக நுழைந்து நம்மை வீழ்த்தப் பார்க்கிறார்கள். அது நிச்சயமாக ஒருபோதும் நடக்காது. அதிமுகவினர் யாரையும் நம்பாமல், தங்கள் உழைப்பால் இந்த இயக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, எங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் தினந்தோறும், உங்கள் ஆட்சியின் அவலங்களை நாட்டு மக்களுக்கு தொழில்நுட்ப நிர்வாகிகளின் உதவியோடு கொண்டு சேர்த்து வருகிறார்கள்.

நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும், அத்தனையும் தவிடுபொடியாக்கி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். காற்றுக்கு எப்படி தடை போட முடியாதோ, அதுபோல அதிமுக ஆட்சிக்கு வருவதை எவராலும் தடுக்க முடியாது. ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் அண்ணா திமுகவுக்கு இன்று செல்வாக்கு குறைந்தவிட்டதாக சொல்வார்கள். அப்படி கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் அதிகாரம் மற்றும் மிரட்டல் காரணமாக, ஊடகங்களையும், பத்திரிகைகளையும் மிரட்டி அவதூறு செய்தியை பரப்பி வருகின்றனர்.

அதிமுகவுக்கு எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், சக்தியும் இருக்கிறது என்பதை இன்று நடைபெறும் கூட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து வருகின்ற எந்த தேர்தல்களாக இருந்தாலும், அண்ணா திமுக தான் வெல்லும் என்பதற்கு சாட்சியாகத் தான் நாமக்கல்லில் நடைபெறும் கட்சியின் 51-ம் ஆண்டு விழா தொடக்க கூட்டத்தைப் பார்க்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அண்ணா திமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும். நாமக்கல்லில் நடக்கும் இந்த கட்சியின் 51-ம் ஆண்டு விழா தொடக்க கூட்டம், அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிள்ளையார் சுழி போடுகின்ற கூட்டமாக இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் யார் போட்டியிட்டாலும், அண்ணா திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்”.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அண்ணா தி.மு.க. 3 ஆக உடைந்துள்ளது என கூறுகிறார். அண்ணா தி.மு.க.வில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்த தி.மு.க. நினைக்கிறது. அண்ணா தி.மு.க. ஒன்றாகதான் இருக்கிறது என்பதை இந்த நாமக்கல் பொதுக்கூட்டம் காட்டுகிறது. உடைக்க வேண்டும் என ஸ்டாலின் முயற்சி செய்தால் அது தோல்வியில் தான் முடியும். அம்மாவின் ஆட்சியில் கவிழ்ப்பதற்காக எதிர்த்து ஓட்டு போட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம். இரவு பகல் பாராமல் மக்களை சந்தித்து இந்த ஆட்சியை நம்மிடம் ஒப்படைத்தவர் அம்மா. அப்படிப்பட்ட அம்மாவுக்கு துரோகம் செய்யும் வகையில் ஓபிஎஸ் நடந்து கொண்டார். அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு எதிராக வாக்களித்த போதும் மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து ஒருங்கிணைப்பாளர் பதவியையும், துணை முதலமைச்சர் பதவியையும் கொடுத்தோம். அதனை எல்லாம் மறந்து விட்டு இன்று துரோகம் செய்கிறார். அம்மாவின் ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். அம்மாவின் ஆட்சியில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டன. தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த இலவசமாக வழங்கினோம்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏராளமான பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்த பின் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். ரத்து செய்யவில்லை. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள். அதையும் வழங்கவில்லை. இதுபோன்று பொய் வாக்குறுதிகளை ஏராளமாக தந்து மக்களை ஏமாற்றி விட்டார்கள்.
அமைச்சர்கள் மக்களை பார்த்து இழிவாக பேசுகிறார்கள். பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம் செய்ய வழி செய்துவிட்டு அமைச்சர் அதனை கிண்டலும் கேலியும் பேசி வருகிறார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.