Take a fresh look at your lifestyle.

நன்னடத்தை விதிமுறையை மீறிய ரவுடிக்கு 256 நாட்கள் ஜெயில்: துணை ஆணையர் பகலவன் உத்தரவு

gangster remanded

72

திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் பகலவன் உத்தரவின்பேரில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு குற்றவாளி சிறையிலடைக்கப்பட்டார்.

சென்னை, சூளைமேடு, கிழக்கு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் கரண் (எ) கரண்குமார், வயது 22. இவர் மீது 1 கொலை, 1 கொலை முயற்சி உட்பட 6 வழக்குகள் உள்ளன. சூளைமேடு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியான இவர் கடந்த 02.03.2022 அன்று திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் பகலவன் முன்பு சாட்சிகளுடன் ஆஜரானார். தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால் கடந்த 12.06.2022 அன்று, அகஸ்டின் ராஜ் என்பவரை தாக்கிய குற்றத்திற்காக சூளைமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

கரண் (எ) கரண்குமார் 1 வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர், பகலவன் கரன் மீது கடும் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி கரண் கு.வி.மு.ச. பிரிவு 107ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து 256 நாட்கள், பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து இன்று (21.06.2022) பகலவன் உத்தரவிட்டார். அதன்பேரில், எதிரி கரண் (எ) கரண்குமார் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.