Take a fresh look at your lifestyle.

நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறிய 2 ரவுடிகளுக்கு மீண்டும் ஜெயில்: அடையாறு துணை ஆணையர் உத்தரவு

73

ஓராண்டு கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட 2 ரவுடிகள் 200 மற்றும் 202 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி.நகரைச் சேர்ந்த கணேஷ் (வயது 31). பிரபல ரவுடியான இவர் குமரன் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 2 கொலை, 1 கொலை முயற்சி வழக்கு, 1 கஞ்சா வழக்கு உட்பட சுமார் 7 குற்ற வழக்குகள் உள்ளன. ஏற்கனவே 1 தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 5.10.2021 அன்று அடையாறு துணை ஆணையாளர் அலுவலகத்தில் ஆஜர் ஆன கணேஷ் தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார்.


அதே போல, சைதாப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான சரவணன் (எ) ஆர்பிட் சரவணன் (வயது 26). கடந்த 7.10.2021 அன்று அடையாறு துணை ஆணையாளரிடம் ஆஜராகி எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என உறுதிமொழி பிணைப் பத்திரம் எழுதிக் கொடுத்தார். ஆனால் கணேஷ் மற்றும் சரவணன் இருவரும் கடந்த 18.3.2022 அன்று குமரன் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம் தகராறு செய்து, அவரது ஆட்டோவை சேதப்படுத்தினர். அது தொடர்பாக குமரன் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 19.03.2022 அன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். கணேஷ், சரவணன் இருவரும் ஓராண்டு கால நன்னடத்தை உறுதிமொழியை மீறியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதனையடுத்து ரவுடி கணேசுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து 200 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதே போல சரவணனுக்கு அவர் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து 202 நாட்களும், பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து நேற்று (06.04.2022) உத்தரவிட்டார். அதன்பேரில், எதிரிகள் இருவரும் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.