சென்னை திருவல்லிக்கேணியில் நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடியை 353 நாட்கள் சிறையிலடைத்து துணைக்கமிஷனர் பகலவன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, பல்லவன் சாலை, சத்தியமூர்த்தி நகர், 7வது தெருவில் வசிக்கும் கார்த்திக் (எ) மாமா கார்த்திக் (வயது 22). இவர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உட்பட சுமார் 7 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், கார்த்திக் கடந்த 11.02.2022 அன்று திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் பகலவன் முன்பு சாட்சிகளுடன் ஆஜரானார். தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால், கார்த்திக் கடந்த 16.02.2022 அன்று வீட்டினருகே கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
அதனையடுத்து கார்த்திக் ஒரு வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவல்லிக்கேணி துணைக்கமிஷனருமாகிய பகலவன் கார்த்திக்குக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 107 கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து, மீதமுள்ள 353 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து இன்று (03.03.2022) உத்தரவிட்டார். அதன் பேரில் கார்த்திக் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.