3 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட ரவுடியை திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் 1,073 நாட்கள் சிறையிலடைத்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, பெரும்பாக்கம், எழில்நகர், 85வது பிளாக், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் (வயது 24). சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளன. அருண்குமார் கடந்த 8.10.2022 அன்று திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் முன்பு சாட்சிகளுடன் ஆஜரானார். தான் திருந்தி வாழப்போவதாகவும், 3 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால் அருண்குமார் அவரது நண்பர் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து கடந்த 25.10.2022 அன்று மணி மற்றும் முருகன் ஆகியோரை கத்தியால் தாக்கி கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டார். அவரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
அருண்குமார் 3 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் அருண்குமாருக்கு கு.விமு.ச பிரிவு 107ன் கீழ் 1,073 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து இன்று (07.11.2022) உத்தரவிட்டார். அதன்பேரில் ரவுடி அருண்குமார் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.