காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டவும் இந்தியாவில் விதைக்கப்படும் மத வேற்றுமை வெறுப்பை களையவும், ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை (Bharat Jodo Yatra) தொடங்கினார். இந்திய ஒற்றுமை பயணம் (Bharat Jodo Yatra) 46 வது நாளை எட்டியுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தை நிறைவு செய்துவிட்டு, தெலங்கானாவிற்குள் நுழைந்துள்ளது.
குறிப்பாக கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் ஓடும் கிருஷ்ணா நதியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு கிலோ மீட்டர் நீளப் பாலத்தில் நடந்து சென்று தெலங்கானா மாநிலத்தின் மகாபுப் நகர் மாவட்டத்திற்குள் நுழைந்தது. இன்று காலை 6 மணிக்கு கர்நாடக எல்லையில் பயணம் தொடங்கிய நிலையில், சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தவுடன் தெலங்கானா மாநிலம் வந்து சேர்ந்தது. இதையொட்டி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் (பாரத் ஜோடோ) அதிகாரப்பூர்வ டுவிட்டரில், ”உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி கர்நாடகமே…” எனப் பதிவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் 8 மாவட்டங்கள் வழியாக 24 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வழிநெடுகிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் என பலரும் ராகுலுடன் கைகோர்த்து நடந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவரை சந்தித்து பேசி தங்களது குறைகளை எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநில எல்லையில் ராகுல் காந்திக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி சிறப்பான வரவேற்பு அளித்தார். மேலும் தெலங்கானா மாநில காங்கிரஸ் தொண்டர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் திரண்டிருந்தனர். அனைவரும் கைகளை அசைத்து ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒட்டுமொத்த சாலையும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டன. பெருந்திரளான மக்கள் கூட்டம் ராகுலை வரவேற்க காத்திருந்து, நடந்து சென்றது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.