Take a fresh look at your lifestyle.

தி.நகர் ஆகாய நடை மேம்பாலம் ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும்

200

தி. நகர் பஸ் நிலையத்தில் இருந்து மாம்பலம் ரெயில் நிலையம் வரை ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் வருகிற ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதலமைச்சர் சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தங்குதடையற்ற போக்கு வரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், வருங்கால போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும் மாநகரின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், சென்னை மாநகராட்சியில் திரு.வி.க நகர் மண்டலம் பெரம்பூர் நெடுஞ்சாலையில் புளியந்தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லாகால்வாயின் குறுக்கே ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு ரூ.43.46 கோடியில் புதிதாக உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்துடன் மழைக்காலங்களில் இச்சாலையில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் குக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் புளியந்தோப்பு பகுதியில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் டாக்டர். அம்பேத்கர் சாலையிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இம்மேம்பாலம் சுமார் 282 மீட்டர் நீளம் மற்றும் 22.70 மீட்டர் அகலமுடையது. உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இருபுறமும் சாய்வுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சாலை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மற்றும் அண்ணாநகர் நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே சந்திக்கடவு எண். 1க்கு மாற்றாக வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும் தெற்கில் ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் வண்ணம் இருவழி மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.61.98 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இம்மேம்பாலமானது கொளத்தூர் பகுதியை அண்ணா நகர் பகுதியுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாகும். இம்மேம்பாலத்தினால் கொளத்தூர், ஜி.கே.எம். காலனி, பெரியார் நகர், கொரட்டூர், பாடி, ஐ.சி.எப். அண்ணா நகர் மற்றும் பெரம்பூர் பகுதி மக்கள் மிகவும் பயனடைவர். இம்மேம்பாலம் சுமார் 500 மீட்டர் நீளம் மற்றும் 8.50 மீட்டர் அகல முடையது. ஐ.சி.எப். பகுதியில் சாய்வுதளம் அமைக்கப்பட்டு, சாலைப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது கொளத்தூர் பக்கம் சாய்வுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரெயில் நிலையத்திற்கு போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் பயணிக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நடைமேம்பாலம் 600 மீட்டர் நீளம் மற்றும் 4.20மீ அகலமுடையது. இவற்றில் நடைமேம்பாலம், பேருந்து நிலைய படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி, ரெயில்வே நிலைய இணைப்பு, ரங்கநாதன் தெருவில் படிக்கட்டுகள் ஆகியவை முடிக்கப்பட்டுள்ளது. தற்போது ரெயில்வே நிலையம் அருகில் மின்தூக்கி அமைக்கும் பணி, விளக்குகள், சிசிடிவி, பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகில் ஒப்பனை அறைகள், ஜெனரேட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.