தமிழகத்தில் வழக்கம் போல பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை தாமதமாக நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 1-ந் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில், திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை அம்மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.