Take a fresh look at your lifestyle.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து மதிப்பு ரூ. 2 ½ லட்சம் கோடியாக உயர்வு

97

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து மதிப்பு ரூ. 2 ½ லட்சம் கோடி என அறிவிக்கப் பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு தினந்தோறும் உலகமெங்கும் இருந்து இங்கு பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு ரூ. 2 ½ லட்சம் கோடி (சுமார் 30 பில்லியன் டாலர்) என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவில் 1933 -ம் ஆண்டு உருவான காலம்தொட்டு இப்போதுதான் முதல் முறையாக அதன் சொத்து மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பிரபல தகவல் சேவை நிறுவனமான விப்ரோ (இதன் சொத்து மதிப்பு ரூ.2.14 லட்சம் கோடி), உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே (இதன் மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடி) மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஐஓசி ஆகியவற்றின் சந்தை மூலதனத்தை விட அதிகம்.

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 10¼ டன் தங்கம், 2½ டன் தங்க நகைகள் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. வங்கிகளில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி டெபாசிட்டுகள் இருக்கின்றன. நாடு முழுவதும் இந்தக் கோவிலுக்கு 960 சொத்துக்கள் உள்ளன. திருப்பதி கோவிலை விட அதிக சொத்து 2 டஜன் கம்பெனிகளுக்கு மட்டுமே இருக்கின்றன.

திருப்பதி கோவிலின் மூத்த அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், “திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் காணிக்கையாக தருகிற ரொக்கம், தங்கம் ஆகியவை அதிகரித்து வருகின்றன. வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி வருமானமும் அதிகரித்து வருகிறது. இதனால் தேவஸ்தானத்தின் செல்வம் தொடர்ந்து பெருகி வருகிறது” என தெரிவித்தார். திருப்பதி கோவிலில் நடப்பு 2022 -23 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.3,100 கோடி ஆகும். திருப்பதி கோவில் சார்பில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, அரியானா, மராட்டியம், டெல்லி மாநிலங்களில் நிறைய கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன.