Take a fresh look at your lifestyle.

திருச்சி மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்- மாணவர்களுக்கு புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்

39

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். அந்த வகையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அதன்படி 28ந்தேதி காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி செல்கிறார். பின்னர் 10.15 மணிக்கு சாலை மார்க்கமாக திருச்சியை அடுத்த காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அங்கு ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை ஊக்குவிப்பதன் மூலம் கல்வி முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பாடங்களை தன்னார்வலர்கள் மூலம் இருசக்கர வாகனங்களில் சென்று மாணவர்களின் இருப்பிடத்திலேயே கற்றுத் தருவதற்காக ஸ்டெம் ஆன் வீல்ஸ் எனவும் பெயரிட்டுள்ளனர்.

இதனையடுத்து மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் எறையூரில் கோத்தாரி சர்க்கரை ஆலையில் புதிய அலகினை தொடங்கி வைக்கிறார். பின்னர் எறையூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன் பின்னர் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

மறுநாள் 29-ந்தேதி (செவ்வாய்க்கழமை) அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்துக்கு செல்கிறார். பின்னர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.31 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 54 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் செலவில் முடிவுற்ற 23 திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், பல்வேறு அரசுத்துறைகள் மூலம் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். அதன் பின்னர் அரியலூரில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்று மதியம் 12.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.