தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதும் சென்னை நகரில் தாம்பரம், ஆவடி என இரண்டு கமிஷனரேட்டுக்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டன. தாம்பரம் போலீஸ் கமிஷனராக டாக்டர் எம். ரவியும், ஆவடி போலீஸ் கமிஷனராக அமல்ராஜும் நியமிக்க ப்பட்டனர். கடந்த 6 மாதங்களாக ரவி பணிபுரிந்து வந்த நிலையில் 31ம் தேதியன்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து ஆவடி கமிஷனர் சந்திப்ராய் ரத்தோர் வசம் தாம்பரம் போலீஸ் கமிஷனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தாம்பரம் புதிய போலீஸ் கமிஷனராக தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்த ஏடிஜிபி அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த கூடுதல் டிஜிபி அமல்ராஜ் முழு விவரங்கள்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் அமல்ராஜ். அங்குள்ள கார்மல் பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தார். பின்னர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் ஹாக்கி விளையாட்டில் தனி முத்திரை பதித்தவர். அது மட்டுமின்றி தேசிய மாணவர் படையிலும் அங்கம் வகித்தார். ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அமல்ராஜ் மனிதவள மேலாண்மைத்துறையில் எம்பிஏ பட்டமும், மதுரை காமராஜர் பல்கலையில் டாக்டர் பட்டமும் பெற்றார்.
1996ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று முதல் பணியாக திருப்பூர் ஏஎஸ்பி அதனையடுத்து மதுரை சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனர், மதுரை புறநகர் எஸ்பி அதனைத் தொடர்ந்து தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் எஸ்பியாக 2000ம் ஆண்டு முதல் 2010 வரை காவல் பயணம் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து அமல்ராஜ் டிஐஜி பதவி உயர்வு பெற்று திருச்சி, ராமநாதபுரம், சேலம் சரகங்களிலும், பின்னர் ஐஜியாக பதவி உயர்ந்து சேலம், திருச்சி, கோவை போலீஸ் கமிஷனராகவும் அதன் பின்னர் திருச்சி, கோவை மண்டல ஐஜியாகவும் பணியாற்றியவர் அமல்ராஜ். கடந்த ஆண்டு சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்ட அமல்ராஜ் பின்னர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்ந்து ஆபரேஷன்ஸ் பிரிவு ஏடிஜிபியாக தமிழக அரசு அவரை நியமித்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக மாற்றப்பட்டார்.
பெற்ற பதக்கங்கள்
சிறப்பான காவல் பணிக்காக அமல்ராஜ் ஜனாதிபதி பதக்கம் மற்றும் சிறந்த பொதுச்சேவை மற்றும் சிறந்த காவல் பணியாற்றியதற்காக முதலமைச்சரின் பதக்கங்களை பெற்றவர். துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் மிகுந்த இவர் தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற்றார். மாநில அளவில் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார். திருச்சி, கோவையில் உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கி சுடும் தளங்களை காவல்துறை சார்பில் அமல்ராஜ் அமைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல கோவை மற்றும் சென்னை எழும்பூரில் மாநிலத்திலேயே முதன்முறையாக போலீஸ் மியூசியம் அமைத்து முனைப்பாக செயல்பட்டவர். மேலும் சேலம், கோவை, திருச்சியில் உயர்மட்ட சிசிடிவி கேமராக்கள் அடங்கிய நவீன கட்டுப்பாட்டு அறை அமைத்ததன் மூலம் அங்கு குற்றங்கள் 40 சதவீதம் குறைந்தன.
தலை சிறந்த எழுத்தாளர்
காவல் பணி மட்டுமின்றி எழுத்திலும் அமல்ராஜ் சிறந்த புலமைப் பெற்றவர். காவல்துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள், வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள், வெல்ல நினைத்தால் வெல்லலாம், சிறகுகள் விரித்திடு, போராடக் கற்றுக்கொள் ஆகிய ஐந்து நூல்கள் அமல்ராஜின் கைவண்ணத்தில் வெளிவந்துள்ள புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
– அமீர் ஹம்ஸா